settings icon
share icon
கேள்வி

கிறிஸ்துவின் தெய்வீகம் வேதாகமத்தின் அடிப்படையிலானதா?

பதில்


இயேசு தம்மைக் குறித்து கூறிய குறிப்பிட்ட கூற்றுக்களோடு கூட அவரது சீஷர்களும் கிறிஸ்துவின் தெய்வீகத்தன்மையை அறிக்கையிட்டுள்ளனர். தேவனாலே மட்டும் செய்யக்கூடியதான பாவத்தை மன்னிக்கும் தன்மை (ஆம் தேவனே பாவத்தினால் பாதிப்புக்குள்ளானவர்) (அப்போஸ்தலர் 5:31; கொலொசேயர் 3:13; சங்கீதம் 130:4; எரேமியா 31:34) இயேசுவுக்கும் உண்டு என்று பறைசாற்றினார்கள். இயேசுவின் உரிமைக்கோரல் கூற்றின்படி, “உயிரோடிருக்கிறவர்களையும் மரித்தவர்களையும் நியாயந்தீர்க்கப்போகிற கர்த்தராகிய இயேசுகிறிஸ்து” (2 தீமோ. 4:1) என்று காண்கிறோம். தோமா இயேசுவை நோக்கி, “என் ஆண்டவரே, என் தேவனே!” என்று கூப்பிட்டார் (யோவான் 20:28). பவுல் இயேசுவை “மகா தேவனும், இரட்சகரும்” (தீத்து 2:13) என்று கூறி, மேலும் இயேசு மனிதனாக அவதரிப்பதற்கு முன், “தேவனுடைய ரூபமாயிருந்தார்” (பிலிப்பியர் 2:5-8) என்றும் சுட்டிக்காட்டுகிறார். பிதாவாகிய தேவன் இயேசுவைக் குறித்து “தேவனே, உம்முடைய சிங்காசனம் என்றென்றைக்குமுள்ளது” என்று கூறுகிறார் (எபிரேயர் 1:8). யோவான் “ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை [இயேசு] தேவனாயிருந்தது” என்று குறிப்பிடுகிறார் (யோவான் 1:1). வேதாகமத்தின் பல பகுதிகள் கிறிஸ்துவின் தெய்வீகத்தன்மையை எடுத்துரைக்கின்றன (பாருங்கள்: வெளி. 1:17; 2:8; 22:13; 1 கொரிந்தியர் 10:4; 1 பேதுரு 2:6-8; சங்கீதம் 18:2; 95:1; 1 பேதுரு 5:4; எபிரேயர் 13:20), கிறிஸ்து அவரது சீஷர்களால் தேவனாக எண்ணப்பட்டார் என்பதற்கு இவற்றில் ஒன்றே போதுமானது.

பழைய ஏற்பாட்டில் யெகோவாவிற்கே (தேவனுடைய அதிகாரப்பூர்வமான நாமம்) உரிய நாமங்கள் இயேசுவுக்கும் அளிக்கப்பட்டுள்ளன. பழைய ஏற்பாட்டு நாமமான “மீட்பர்” (சங்கீதம் 130:7; ஓசியா 13:14) புதிய ஏற்பாட்டில் இயேசுவுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது (தீத்து 2:13; வெளி. 5:9). மத்தேயு 1 ல், இயேசு இம்மானுவேல்-“தேவன் நம்மோடிருக்கிறார்” என்றழைக்கப்படுகிறார். சகரியா 12:10 ல், யெகோவா தான், “அவர்கள் தாங்கள் குத்தின என்னை நோக்கிப்பார்த்து,” கூறுகிறார். ஆனால் புதிய ஏற்பாடு இயேசுவின் சிலுவை மரணத்தைக் குறிப்பிட இந்த வசனத்தைப் பயன்படுத்துகிறது (யோவான் 19:37; வெளி. 1:7). யெகோவாவைக் குறித்தும், இயேசுவைக் குறித்தும் “குத்தினார்கள்” மற்றும் “நோக்கிப்பார்த்தார்கள்” என வேதாகமம் சொல்லுமானால், இயேசுவும் யெகோவாவும் ஒன்றாக இருக்கிறார்கள் அல்லது இருவரும் ஒன்றே என்று அர்த்தம் கொள்ளமுடியும். ஏசாயா 45:22-23 ஐ அப்போஸ்தலனாகிய பவுல் இயேசுவுக்கு உபயோகித்து வியாக்யானம் செய்கிறார் (பிலிப்பியர் 2:10-11). மேலும், இயேசுவினுடைய நாமம் ஜெபத்தில் தேவனுடைய நாமத்தோடு பயன்படுத்தப்பட்டுள்ளது, “நம்முடைய பிதாவாகிய தேவனாலும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக” (கலாத்தியர் 1:3; எபேசியர் 1:2). கிறிஸ்து தெய்வீகத்தன்மை இல்லாதவரென்றால், இது தேவதூஷணமாகிவிடும். இயேசுவின் ஞானஸ்நானக் கட்டளையிலும் இயேசுவினுடைய நாமம் தேவனுடைய நாமத்தோடு இணைந்து காணப்படுகிறது, “பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே [ஒருமை]” (மத்தேயு 28:19; மற்றும் 2 கொரிந்தியர் 13:14 யையும் காண்க).

தேவனால் மட்டுமே செய்யக்கூடிய செயல்கள் இயேசுவுக்கு சூடப்பட்டுள்ளது. இயேசு மரித்தோரை எழுப்பினது மட்டுமல்லாமல் (யோவான் 5:21, 11:38-44) பாவத்தையும் மன்னித்தார் (அப்போஸ்தலர் 5:31, 13:38), அவர் உலகைப் படைத்து, தாங்கவும் செய்கிறார் (யோவான் 1:2; கொலொசேயர் 1:16-17). யெகோவா மட்டுமே சிருஷ்டிப்பின் போது இருந்தார் என்பதை ஒருவர் எண்ணும் போது இது மேலும் தெளிவாகின்றது. மேலும், தெய்வீகதன்மையுள்ளவர் அல்லது தேவன் மட்டுமே கொண்டுள்ள பண்புகளை கிறிஸ்துவும் உடையவராயிருக்கிறார்: நித்தியமானவர் (யோவான் 8:58), சர்வ வியாபி (மத்தேயு 18:20, 28:20), சர்வ ஞானி (மத்தேயு 16:21) மற்றும் சர்வவல்லமையுள்ளவர் (யோவான் 11: 38-44).

நான் தேவன் என்று கூறுவது ஒன்று அல்லது அது உண்மையென்று மற்றவர்களை நம்பவைத்து முட்டாளாக்குவது வேறு, பிறகு முழுக்க முழுக்க அது உண்மையென்று நிரூபிப்பது வேறு. கிறிஸ்து தன்னுடைய தெய்வீகத்தன்மைக்கான கோரிக்கையை பல அதிசயங்கள் மற்றும் அற்புதங்கள் மூலமாக நிரூபித்திருக்கிறார். இயேசுவின் அற்புதங்களில் ஒருசில: தண்ணீரைத் திராட்சரசமாக மாற்றியது (யோவான் 2:7), தண்ணீரின் மேல் நடந்தது (மத்தேயு 14:25), பொருட்களைப் பன்மடங்காக்கியது (யோவான் 6:11), குருடரைக் குணமாக்கியது (யோவான் 9:7), முடவரைக் குணமாக்கியது (மாற்கு 2:3), பிணியாளிகளைக் குணமாக்கியது (மத்தேயு 9:35; மாற்கு 1:40-42), மேலும் மரித்தோரை உயிரோடு எழுப்பியது (யோவான் 11:43-44; லூக்கா 7:11-15; மாற்கு 5:35) ஆகியவைகள் அடங்கும். மேலும், கிறிஸ்து தாமே மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார். புறமதத்திலுள்ள புராணக்கதைகளில் பெயரளவில் மரித்து, உயிர்த்தெழும் கடவுள்களோடு ஒப்பிடும் போது, உயிர்த்தெழுதலைப் போன்ற எதுவும் மற்ற மதங்களால் வலியுறுத்தப்படவில்லை, மற்றும் மற்ற எந்தக் கோரிக்கையும் இந்த அளவிற்கு வேதத்திற்கு அப்பாற்பட்ட சான்றுகளை உடையதாயில்லை.

கிறிஸ்தவரல்லாத குற்றங்காண்கிற அறிஞர்கள் கூட ஏற்றுக் கொள்ளுகின்ற வகையில் இயேசுவைக் குறித்து குறைந்தது பன்னிரண்டு வரலாற்று உண்மைகள் இருக்கின்றன:

1. இயேசு சிலுவையில் அறையப்பட்டு மரித்தார்.
2. அவர் அடக்கம் பண்ணப்பட்டார்.
3. அவரது மரணம் சீஷர்களை கலங்கச் செய்து நம்பிக்கை இழக்கவும் செய்தது.
4. சில நாட்களுக்குப் பின்பு இயேசுவின் கல்லறை வெறுமையானதாக கண்டுபிடிக்கப்பட்டது (கண்டுபிடிக்கப் பட்டதாகக் கோரப்பட்டது).
5. உயிர்த்தெழுந்த இயேசுவின் காட்சிகளை உணர்ந்ததாக சீஷர்கள் நம்பினர்.
6. இதற்குப் பின்பு, சந்தேகித்தவர்கள் தைரியமான விசுவாசிகளாக மாறினர்.
7. இச்செய்தியே ஆதித் திருச்சபையின் மையப் பிரசங்கமானது.
8. இச்செய்தி எருசலேமில் பிரசங்கிக்கப்பட்டது.
9. இப்பிரசங்கத்தின் விளைவாக திருச்சபை தோன்றி வளர்ந்தது.
10. உயிர்த்தெழுதல் நாள், ஞாயிறு, ஓய்வு நாளுக்குப் (சனிக்கிழமை) பதிலாக பிரதான ஆராதனை நாளானது.
11. நாஸ்திகவாதியாக இருந்த யாக்கோபு, உயிர்த்தெழுந்த இயேசுவை கண்டபோது அவரும் விசுவாசித்து சீஷரானார்.
12. கிறிஸ்தவத்திற்கு எதிரியாயிருந்த பவுல் உயிர்த்தெழுந்த இயேசுவின் காட்சியைக் கண்ட அனுபவத்தால் மாற்றப்பட்டார்.

இந்த குறிப்பிட்ட பட்டியலை யாராவது எதிர்த்தாலும் கூட, உயிர்த்தெழுதலை நிரூபிக்கவும், சுவிசேஷத்தை நிலைநாட்டவும் ஒரு சில சான்றுகளே போதுமானது: இயேசுவின் மரணம், அடக்கம், உயிர்த்தெழுதல், தோன்றி காட்சியளித்தல் (1 கொரிந்தியர் 15:1-5). ஒருவேளை சில கோட்பாடுகள் மேற்கூறிய ஒன்று அல்லது இரண்டு உண்மைகளுக்கு விளக்கமளிக்க முடிந்தாலும், உயிர்த்தெழுதலினால் மட்டுமே அனைத்தையும் விளக்கவும் கணக்கிடவும் முடியும். சீஷர்கள் உயிர்த்தெழுந்த இயேசுவைக் கண்டதாக கூறுவதை திறனாய்வாளர்கள் ஏற்றுக்கொள்கின்றனர். மக்களை மாற்றின உயிர்த்தெழுதல் போல் பொய்களோ, பிரம்மைகளோ செய்யமுடியாது. முதலாவது, இதனால் அவர்களுக்கு லாபம் என்ன? கிறிஸ்தவம் பிரசித்தி பெறவுமில்லை, நிச்சயமாக பணம் ஈட்டித்தரவுமில்லை. இரண்டாவது, பொய்யர்கள் நல்ல இரத்தச்சாட்சிகளாகயிருக்க முடியாது. தங்களது விசுவாசத்திற்காக கொடூரமான முறையில் மரித்த சீஷர்களின் விருப்பத்திற்கு சிறந்த விளக்கம் உயிர்த்தெழுதல் தவிர வேறொன்றுமில்லை. ஆம், பலர் தாங்கள் உண்மையென்று நம்பின பொய்க்காக மரிப்பார்கள், ஆனால் எவரும் உண்மையில்லை என்று தாங்கள் அறிந்த ஒன்றுக்காக மரிக்கமாட்டார்கள்.

முடிவாக, கிறிஸ்து தான் யெகோவா என்று உரிமைக்கோரினார், அதாவது அவர் தெய்வீகத்தன்மை உடையவர் (ஏதோ “ஒரு கடவுள்” அல்ல ஆனால் ஒரே உண்மையான தேவன்); அவரது சீஷர்கள் (விக்கிரக ஆராதனைக்குப் பயந்தவர்கள்) அவரை தேவன் என்று நம்பி ஏற்றுக்கொண்டனர். கிறிஸ்து தனது தெய்வீகத்தன்மையை அதிசயங்கள் (உலகையே மாற்றின உயிர்த்தெழுதல் உட்பட), மூலம் நிரூபித்தார். வேறெந்த கற்பிதக் கொள்கையும் (உத்தேசம்) இந்த உண்மைகளை விளக்க முடியாது. ஆம், கிறிஸ்துவின் தெய்வீகத்தன்மை வேதாகமத்தின் பிரகாரமானதாகும்.

English



முகப்பு பக்கம்

கிறிஸ்துவின் தெய்வீகம் வேதாகமத்தின் அடிப்படையிலானதா?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries