settings icon
share icon
கேள்வி

தேவன் என்பவர் உண்மைதானா? தேவன் என்பவர் உண்மைதான் என்பதை நான் எப்படி தெரிந்துகொள்வது?

பதில்


தேவன் என்பவர் உண்மைதான் என்பதை நாம் அறிந்துகொள்வதற்காக, அவர் தம்மை மூன்று வழிகளில் வெளிப்படுத்தியிருக்கிறார்: சிருஷ்டிப்பு, அவருடைய வார்த்தை மற்றும் அவரது குமாரனாகிய இயேசுகிறிஸ்து.

தேவன் இருக்கிறார் என்பதற்கான பொதுவான மற்றும் அடிப்படையான ஆதாரம் அவர் உருவாக்கினவைகள் தான். “எப்படியென்றால், காணப்படாதவைகளாகிய அவருடைய நித்திய வல்லமை தேவத்துவம் என்பவைகள், உண்டாக்கப்பட்டிருக்கிறவைகளினாலே, உலகமுண்டானது முதற்கொண்டு, தெளிவாய்க் காணப்படும்; ஆதலால் அவர்கள் போக்குச்சொல்ல இடமில்லை” (ரோமர் 1:20). “வானங்கள் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகிறது, ஆகாயவிரிவு அவருடைய கரங்களின் கிரியையை அறிவிக்கிறது” (சங்கீதம் 19:1).

நீங்கள் வயல்வெளி நடுவில் ஒரு கைக்கடிகாரத்தை கண்டுபிடிக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுவோம், நீங்கள் உடனே அந்த கடிகாரம் எங்கிருந்தோ திடீரென அங்கே தோன்றி வந்ததாகவோ அல்லது இதற்கு முன்பதாக இருந்தே அந்த கைக்கடிகாரம் இருந்திருக்கிறது என்றோ நிச்சயமாக எண்ணமாட்டீர்கள். அந்த கைக்கடிகாரத்தின் வடிவமைப்பைக் கொண்டு அதற்கு பின்னணியில் ஒரு வடிவமைப்பாளர் கண்டிப்பாக இருக்கிறார் என்பதாக நீங்கள் எடுத்துக்கொள்வீர்கள். ஆனால் இவைகளைக் காட்டிலும் தேவனின் படைப்பிலே, அழகான வடிவமைப்பையும், தெளிவான தோற்றத்தையும் நாம் காண்கிறோம். நாம் கணக்கிடுகிற நேரம் வெறும் கைக்கடிகாரங்களிலே அல்ல, மாறாக தேவனின் படைப்பிலுள்ள பூமியின் சுழற்சியினாலேயே நேரத்தைக் கணக்கிடுகிறோம். உலகத்தின் அமைப்பு அதை உருவாக்கினவருடைய அழகான படைப்பை வெளிப்படுத்துகிறது. அதை உருவாக்கினவர் ஒருவர் இருக்கிறாரென்பதை இந்த பிரபஞ்சம் பிரதிபலிக்கிறது, இதுவே ஒரு மாபெரும் வடிவமைப்பாளர் இதற்கு பின்னில் இருக்கிறார் என விவாதிக்கிறது.

இரகசிய குறியீட்டோடு வருகிற ஒரு செய்தியை நீங்கள் பெறுகிறீர்கள், உடனே அந்த இரகசிய குறியீட்ட உடைக்க பார்ப்பீர்கள். நீங்கள் நினைப்பதெல்லாம், இந்த செய்திக்கு பின்னால் ஒரு அறிவுப்பூர்வமான அனுப்பினவர் இருக்கிறார் மற்றும் யாரோ ஒருவர் இந்த செய்தியை உருவாக்கியிருக்க வேண்டும் என்பதாகும். ஆக்சிஜனற்ற ரைபோகரு அமில குறியீடு (DNA code) எவ்வளவு சிக்கலான, பல பாகங்களை கொண்டதாக நம்முடைய சரீரத்தில் உள்ள ஒவ்வொரு உயிரணுக்களிலும் கொண்டிருக்கிறோம்? ஆக்சிஜனற்ற ரைபோகரு அமில குறியீடு பார்க்கும்போது, இந்த குறியீட்டை எழுதின எழுத்தாளரை நம்மால் மெய்யாகவே கண்டுகொள்ளாமல் போகமுடியுமா?

தேவன், மிக அழகாக, இசைவாக அமைக்கப்பட்ட இந்த உலகத்தை உண்டாக்கினவர் மட்டுமல்லாமல், ஒவ்வொருவர் உள்ளத்திலும், நித்தியத்தைக் குறித்த உணர்வையும் வைத்திருக்கிறார் (பிரசங்கி 3:11). மனிதர்களுக்கு உள்ளார்ந்த உணர்வுகள் இருக்கிறது, நம் கண்களால் காண்பதைக்காட்டிலும் சிறந்ததொரு காரியம் வாழ்க்கையில் இருக்கிறது, உலகத்தில் வழக்கமாய் நடைபெறுவதைக் காட்டிலும் மேலான ஒரு நிலை இருக்கிறது. நித்தியத்தைக் குறித்த வெளிப்பாடு குறைந்தபட்சம் இரண்டு வழிகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது: சட்டம்-இயற்றுதல் மற்றும் ஆராதனை.

சரித்திரத்தின் எல்லா காலக்கட்டத்திலும் உண்டாயிருந்த ஒவ்வொரு நாகரிகத்திலும் சில நல்லொழுக்கம் மற்றும் சமுதாய ஒழுங்கு சட்டத்தை கொண்டிருந்தது. அதை ஒவ்வொரு கலாச்சாரத்திலும் எல்லாராலும் போற்றப்படுவதாக இருக்கிறது. உதாரணமாக “அன்பு” உலகிலுள்ள எல்லாராலும் மேலாக மதிக்கப்படுகிறது. அதே சமயம் “பொய் சொல்லுவது” உலகிலுள்ள எல்லோராலும் கண்டிக்கப்படுகிறது. இந்த பொதுவான ஒழுக்கம் மற்றும் நெறிமுறைகள், அதாவது நல்லது எது? தீயது எது? என்பதை நிர்ணயிக்கும் உலகளாவிய ஏற்றுக்கொள்ளக்கூடிய இந்த நியதி நமக்குள்ளே இருப்பது, இதை நமக்கு அளித்த எல்லாவற்றிற்கும் மேலாக ஒருவர் இருக்கிறார் என்பதையே சுட்டிக் காண்பிக்கிறது.

அதைப் போலவே உலகத்திலுள்ள மக்களனைவரும் அவர்கள் எந்த கலாச்சாரத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும், தேவனைத் தொழுது கொள்ள வேண்டும் என்கிற ஒரு அமைப்பை ஏற்படுத்தியிருக்கிறார்கள். ஒருவேளை அவர்கள் தொழுதுகொள்கிற தெய்வமோ அல்லது பொருளோ வேறுபட்டிருக்கலாம். ஆனால் “மேலான ஒரு சக்தி/வல்லமை” இருக்கிறது என்பதை எல்லாருடைய உள்ளுணர்வும் ஏற்றுக் கொள்கிறது. தேவன் தமது சாயலாகவே மனிதனை உண்டாக்கினார் என்பதே நாம் தேவனைத் தொழுது கொள்வதற்கு ஏற்ற மனப்பான்மையை நமக்கு தந்திருக்கிறது (ஆதி. 1:27).

தேவன் தமது வார்த்தையைக் கொண்டும் (வேதாகமம் மூலமாக) தம்மை வெளிப்படுத்தியிருக்கிறார். வேதாகமம் முழுவதுமே தேவன் இருக்கிறாரென்பதற்கு பிரத்தியட்சமாக இருக்கிறது (ஆதியாகமம் 1:1; யாத்திராகமம் 3:14). ஒரு மனிதன் தனது சுயசரிதையை எழுதும்போது, அவர் மெய்யாகவே இருக்கிறார் என்பதை நிரூபிப்பதற்காக தனது நேரத்தை வீணடிக்க மாட்டார். அதேபோல தேவனும், தான் இருப்பதை அல்லது ஜீவிப்பதை அவருடைய புத்தகத்தில் அதிக நேரம் எடுத்து எழுதி நிருபிக்கவேண்டிய அவசியம் அவருக்கு இல்லை. வாழ்க்கையை மாற்றுகிற சுபாவமுள்ள வேதாகமம், அதனுடைய துல்லியம் மற்றும் எழுதுகின்ற வேளைகளில் தொடர்ந்துள்ள அற்புதங்கள் யாவும் போதுமான ஆதாரங்களாயிருக்கிறது.

மூன்றாவதாக, தேவன் தமது குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாக தம்மை வெளிப்படுத்தியிருக்கிறார் (யோவான் 14:6-11). “ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரே பேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது” (யோவான் 1:1, 14; கொலோ. 2:9ஐயும் காண்க).

இயேசுகிறிஸ்துவின் அற்புதமான இவ்வுலக வாழ்க்கையில், பழைய ஏற்பாட்டின் அத்தனை பிரமாணங்களையும் பரிபூரணமாக கடைபிடித்து, மேசியாவாகிய அவரைப்பற்றின எல்லா தீர்க்கதரிசனங்களையும் நிறைவேற்றினார் (மத்தேயு 5:17). இயேசு கிறிஸ்து எண்ணற்ற அற்புதங்களையும், ஏராளமான மனதுருக்கத்தையும், தான் கொண்டு வந்த செய்தியை உறுதிப்படுத்துவதற்கும், தெய்வீகத்திற்கு சாட்சியாக செய்தார் (யோவான் 21:24, 25). அவர் சிலுவையிலறையப்பட்டு மூன்று நாட்களுக்கு பிறகு மரித்தோரிலிருந்து உயிரோடெழும்பினார், இந்த உண்மை நூற்றுக்கணக்கான நேரில் கண்ட சாட்சிகளால் உறுதிப்படுத்தப்பட்டது (1 கொரி. 15:6). இயேசு கிறிஸ்து யார் என்பதற்கு ஏராளமான வரலாற்று ஆதாரங்கள் மலைபோல் குவிந்து கிடக்கின்றன. அப்போஸ்தலனாகிய பவுல் கூறியதுபோல, “இது ஒரு மூலையிலே நடந்த காரியமல்ல” (அப்போஸ்தலர் 26:26).

தங்கள் சொந்த கருத்தக்களை மட்டுமே நம்புகிற அநேக நாஸ்திகர்கள் மற்றும் சந்தேகவாதிகள் இருப்பார்கள் என்றும் அவர்கள் தேவனில்லை என்பதற்கு அநேக ஆதாரங்களை கொடுப்பார்கள் என்றும் அறிந்திருக்கும். சிலருக்கு எத்தனை ஆதாரங்களை கூறினாலும் அவர்கள் நம்பமாட்டார்கள் (சங்கீதம் 14:13). இது எல்லாமே விசுவாசத்தினாலேயே வருகிறது (எபிரெயர் 11:6).

English



முகப்பு பக்கம்

தேவன் என்பவர் உண்மைதானா? தேவன் என்பவர் உண்மைதான் என்பதை நான் எப்படி தெரிந்துகொள்வது?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries