settings icon
share icon
கேள்வி

மரணத்திற்கு பின்பு வாழ்வு உண்டா?

பதில்


மரணத்திற்குப் பின்பு வாழ்வு உண்டா என்பது ஒரு உலகளாவிய கேள்வியாகும். நம்மெல்லாரையும் அவரோடு உட்படுத்திக்கொண்டு யோபு இவ்வாறு கேட்கிறார், "ஸ்திரீயினிடத்தில் பிறந்த மனுஷன் வாழ்நாள் குறுகினவனும் சஞ்சலம் நிறைந்தவனுமாயிருக்கிறான். அவன் பூவைப்போலப் பூத்து அறுப்புண்கிறான்; நிழலைபோல நிலைநிற்காமல் ஓடிப்போகிறான்... மனுஷன் செத்தபின் பிழைப்பானோ?" (யோபு 14:1-2, 14). யோபுவைப்போலவே நம் அனைவருக்கும் இந்த கேள்வி ஒரு சவாலாக இருக்கிறது. உண்மையில் நாம் மரித்தபின் நமக்கு நடப்பது என்ன? நாம் அப்படியே ஜீவிக்காமல் ஒன்றும் இல்லாமல் போய்விடுகிறோமா? அல்லது வாழ்வு என்பது தனிப்பட்ட உன்னத நிலமையை அடையும்வரை நாம் பூமிக்கு வருவதற்கும் பிறகு திரும்பிப் போவதற்குமான ஒரு சுழலும் கதவா? எல்லாரும் மரித்தபிறகு ஒரே இடத்திற்குப் போகிறார்களா அல்லது நாம் வேறே இடங்களுக்குப் போகிறோமா? உண்மையில் மோட்சம் மற்றும் நரகம் என்கிற இடங்கள் இருக்கின்றனவா?

வேதாகமம் நமக்கு கூறுகிறது என்னவெனில், மரணத்திற்குப்பின் வாழ்வு உண்டு என்பது மட்டுமல்ல, மாறாக மகிமைப்பொருந்தின நித்தியமான வாழ்வு உண்டு என்று கூறுகிறது – அதாவது "தேவன் தம்மில் அன்பு கூருகிறவர்களுக்கு ஆயத்தம்பண்ணினவைகளைக் கண் காணவுமில்லை, காது கேட்கவுமில்லை, அவைகள் மனுஷருடைய இருதயத்தில் தோன்றவுமில்லை" (1 கொரிந்தியர் 2:9). நமக்கு இந்த நித்திய வாழ்வை பரிசாக கொடுப்பதற்காக இயேசு கிறிஸ்து, தேவன் மாம்சத்தில் இப்பூமிக்கு வந்தார். "நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார், நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்" (ஏசாயா 53:5). நாம் அனைவரும் அடையவேண்டிய தண்டனையை இயேசு தம்மேல் எடுத்துக்கொண்டு நமது பாவங்களுக்கான தண்டனைக்கு விலையாக தம்முடைய ஜீவனையே கொடுத்தார். மூன்று நாட்களுக்குப்பின், கல்லறையிலிருந்து உயிரோடு எழும்பி தம்மை மரணத்தை வென்றவராக நிரூபித்தார். அவர் மீண்டும் பரலோகத்திற்கு ஏறிச்செல்லும் முன்பாக 40 நாட்கள் பூமியில் இருந்து பின்பு ஆயிரக்கணக்கானோர் காணதக்கதாக பரமேறி சென்றார். ரோமர் 4:25 கூறுகிறதாவது, "அவர் நம்முடைய பாவங்களுக்காக ஒப்புக்கொடுக்கப்பட்டும், நாம் நீதிமான்களாக்கப்படுவதற்காக எழுப்பப்பட்டும் இருக்கிறார்."

கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் தெளிவாகப் பதிவு செய்யப்பட்டு விவரிக்கப்பட்டுள்ள ஒரு நிகழ்வு ஆகும். அப்போஸ்தலனாகிய பவுல் அதன் நம்பகத்தன்மையை, கண்ணால் கண்டவர்களிடத்தில் கேள்வி கேட்டுத் தெரிந்து கொள்ளுமாறு ஜனங்களிடத்தில் சவாலிட்டார். அந்த உண்மையை ஒருவராலும் இல்லை மறுக்க இயலவில்லை. இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் கிறிஸ்தவ விசுவாசத்தின் மூலைக்கல் ஆகும். கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டதால், நாமும் அவ்வாறே எழுப்பப்படுவோம் என்று விசுவாசம் நமக்குண்டு. இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் மரணத்திற்குப்பின் உள்ள வாழ்வுக்கான மிகப்பெரிய சான்றாகும். மரித்தோரிலிருந்து எழுந்து ஜீவனுக்குள் பிரவேசிக்கப்போகிற மாபெரும் அறுவடைக்கு கிறிஸ்து முதலானவராக இருக்கிறார். ஆதாமின் வழித்தோன்றளாகிய சகல மனிதர்களுக்கும் ஆதாம் என்னும் ஒரே மனிதன் மூலமாக சரீர மரணம் வந்தது. ஆனால் இயேசு கிறிஸ்துவின் மேலுள்ள விசுவாசத்தின் மூலமாக தேவனுடய குடும்பத்தில் சுவீகாரப்பிள்ளைகளாய் இணைக்கப்பட்ட அனைவருக்கும் புது வாழ்வு அளிக்கப்படும் (1 கொரிந்தியர் 15:20-22). இயேசுவின் சரீரத்தை தேவன் எழுப்பினதுபோல இயேசுவின் வருகையின்போது நமது சரீரங்களும் எழுப்பப்படும் (2 கொரிந்தியர் 6:14).

நாம் எல்லாரும் மரித்தோரிலிருந்து எழுப்பப்படுவோமென்கிறபோதிலும், எல்லாரும் பரலோகம் செல்வதில்லை. ஒவ்வொருவரும் அவர்கள் வாழ்கிற இந்த இம்மையின் வாழ்க்கையில்தானே ஒரு முடிவை எடுத்து, இந்த முடிவின் அடிப்படையில் அவர்களுடைய மறுமைக்குரிய நித்தியத்தை தேர்ந்தெடுக்கிறவர்களாக இருப்பார்கள். ஒரே தரம் மரித்து, பின்பு நியாயத்தீர்ப்படைய நமக்கு நியமிக்கப்பட்டு இருப்பதாக வேதாகமம் கூறுகிறது (எபிரெயர் 9:27). கிறிஸ்துவின் மேலுள்ள விசுவாசத்தின்மூலம் நீதிமான்களாக்கப்பட்டவர்கள் பரலோகத்தில் நித்திய ஜீவனை அடைவார்கள், அதேசமயம் கிறிஸ்துவை விசுவாசித்து அவரை இரட்சகராக ஏற்றுக்கொள்ளாதவர்களோ நரகத்தில் தள்ளப்பட்டு நித்திய ஆக்கினைத்தீர்ப்பை அடைவார்கள் (மத்தேயு 25:46). நரகமானது வெறும் இருக்கிறதான ஒரு நிலை அல்ல மாறாக பரலோகத்தைப்போலவே எழுத்தியியல் பிரகாரமான ஒரு இடம் ஆகும். அது அநீதியுள்ளவர்கள் நித்திய காலமாக தேவனுடைய கோபாக்கினையை அனுபவிக்கும் ஒரு இடம் ஆகும். நரகமானது ஒரு அடியில்லா குழியாக விவரிக்கப்பட்டுள்ளது (லூக்கா 8:31; வெளிப்படுத்தல் 9:1) மேலும் அக்கினியும் கந்தகமும் எரிகிற அக்கினி கடலாகவும், அதில் வசிப்போர் யாவரும் இரவும் பகலும் சதாகாலமும் வாதிக்கப்படுவார்கள் என்றும் விவரிக்கப்பட்டுள்ளது (வெளிப்படுத்தின விசேஷம் 20:10). நரகத்தில் அழுகையும் பற்கடிப்பும் மிகுந்த துக்கத்தையும் கோபத்தையும் குறிக்கும்வண்ணமாக இருக்கும் (மத்தேயு 13:42).

துன்மார்க்கனுடைய மரணத்தில் தேவன் மகிழுபவர் அல்ல, மாறாக அவர்கள் தங்களுடைய தீய வழிகளை விட்டு திரும்பும்படியேயும் ஜீவனை அடையும்படியேயுமே அவர் விரும்புகிறார் (எசேக்கியேல் 33:11). ஆனால் அவர் நம்மை ஒப்புக்கொடுக்கும்படியாக கட்டாயப்படுத்துவதில்லை; நாம் அவரைப் புறக்கணிப்பதை தெரிந்துகொள்வோமானால், அவர் நமது தீர்மானத்தை ஏற்றவராக நித்தியமாக நாம் அவரை விட்டு விலகி வாழும்படி தள்ளப்படுகிறோம். இனி வரப்போவதற்கான ஒரு ஆயத்தம் என்கிற நிலையில் பூமியில் நம்முடைய வாழ்க்கை ஒரு பரீட்சையாக இருக்கிறது. விசுவாசிகளை பொறுத்தமட்டில், மரணத்திற்குப் பின்னால் அவர்களது வாழ்வானது தேவனோடு பரலோகத்தில் வாழும் வாழ்க்கை ஆகும். அவிசுவாசிகளுக்கோ, அவர்களுடைய மரணத்திற்குப் பின்னர் அக்கினி கடலில் நித்தியத்தை கழிக்கும் நிலையாகும். நாம் நமது மரணத்திற்கு பின்னர் நித்திய காலமெல்லாம் அக்கினிக் கடலில் வேதனையை அனுபவிப்பதை தவிர்த்து நித்திய வாழ்வைப் எப்படிப் பெற்றுக்கொள்ளலாம்? இயேசு கிறிஸ்துவின்மேல் விசுவாசம் மற்றும் நம்பிக்கை வைக்கிற ஒரே ஒரு வழி மாத்திரமே உண்டு. இயேசு சொன்னார்: "நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்; உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்" (யோவான் 11:25-26).

இந்த இலவசமான பரிசாகிய நித்திய வாழ்வு எல்லாருக்கும் கிடைக்கூடியதாக இருக்கிறது. "குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் நித்திய ஜீவனை உடையவனாயிருக்கிறான்; குமாரனை விசுவாசியாதவனோ ஜீவனைக் காண்பதில்லை, தேவனுடைய கோபம் அவன்மேல் நிலைநிற்கும்" (யோவான் 3:36). மரணத்திற்குப்பிறகு தேவனுடைய பரிசாகிய இரட்சிப்பைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு நமக்கு அளிக்கப்படுவதில்லை. நமது நித்தியத்தை எங்கே செலவழிக்கப்போகிறோம் என்கிற காரியம் நாம் இயேசு கிறிஸ்துவை ஏற்பது மற்றும் புறக்கணிப்பதில் அடங்கியிருக்கிறது. "இதோ, இப்பொழுதே அநுக்கிரககாலம், இப்பொழுதே இரட்சணியநாள்" (2 கொரிந்தியர் 6:2). இயேசு கிறிஸ்துவின் மரணத்தை தேவனுக்கு விரோதமான நமது பாவங்களுக்கான முழுப் பரிகாரமாக நாம் நம்புவோமானால், இவ்வுலகில் ஒரு அர்த்தமுள்ள வாழ்க்கை மட்டுமல்ல, மரணத்திற்குப்பின்பும் கிறிஸ்துவின் மகிமையான பிரசன்னத்தில் நித்தியமான வாழ்க்கை நமக்கு உறுதியளிக்கப்பட்டிருக்கிறது.

நீங்கள் இங்கே வாசித்த காரியங்கள் நிமித்தம் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வதற்கு தீர்மானித்திருக்கிறீர்களா? அப்படியானால், கீழேயுள்ள “கிறிஸ்துவை நான் இன்று ஏற்றுக்கொண்டிருக்கிறேன்” என்கிற பொத்தானை அழுத்தவும்.

English



முகப்பு பக்கம்

மரணத்திற்கு பின்பு வாழ்வு உண்டா?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries