settings icon
share icon
கேள்வி

நான் ஏன் தற்கொலை செய்துகொள்ள கூடாது?

பதில்


தற்கொலை மூலம் தங்களது சொந்த வாழ்க்கையை முடிவுக்கு கொண்டுவரும் எண்ணங்கள் கொண்டவர்களை நோக்கி நம் இருதயங்கள் செல்கின்றன. ஒருவேளை இப்போது அந்த நிலையில் தான் நீங்கள் இருப்பீர்களானால், அது நம்பிக்கையின்மை மற்றும் மனக்கசப்பு போன்ற பல உணர்வுகளின் உச்சகட்டமாகும். நீங்கள் ஒரு ஆழமான படுகுழியில் இருப்பது போல் உணரக்கூடும், மேலும் அதிலிருந்து மீண்டுவர கூடுமா ஏதேனும் நம்பிக்கை உண்டா என்கிற சந்தேகமும் எழலாம். நீங்கள் எந்த நிலைமையில் இருக்கிறீர்கள் என்று யாருமே கவலைப்படவோ, உணர்ந்துகொள்ளவோ இல்லாதது போல் தோன்றும். வாழ்க்கை வாழ்வதில் ஒரு பயனுமில்லை ... அல்லது இருக்கின்றதா?

இத்தருணத்தில் ஒரு சில மணித்துளிகள் தேவனை உங்கள் வாழ்வில் வர அனுமதித்து அவரையே உண்மையாக தேவனாக எண்ணுவீர்களானால், அவர் எவ்வளவு பெரியவர் என்பதை உங்களுக்கு நிரூபிப்பார்; ஏனென்றால், “தேவனால் கூடாதது ஒன்றுமில்லை” (லூக்கா 1:37). ஒருவேளை கடந்தகால காயங்களின் தழும்புகள், உங்களை நிராகரிக்கப்பட்டு, வெறுக்கப்பட்டு, கைவிடப்பட்டவர்களைப் போன்ற உணர்வுக்குள்ளாக்கி உங்களை அடக்கிவைத்திருக்கலாம். இது சுய-பச்சாதாபம், கோபம், கசப்பு, பழிவாங்கும் எண்ணங்கள், அல்லது தேவையில்லாத பயங்கள் போன்றவைகள், உங்களுடைய முக்கியமான உறவுகளில் பிரச்சனைகளைக் கொண்டு வந்திருக்கலாம்.

ஏன் நீங்கள் தற்கொலை செய்துகொள்ளக்கூடாது? நண்பரே, உங்கள் வாழ்விலுள்ள காரியங்கள் எவ்வளவு மோசமானவைகளாக இருந்தாலும் சரி, உங்களை உங்களுடைய கலக்கத்தின் பாதையினூடே நடத்தி, ஆச்சரியமான வெளிச்சத்திற்கு கொண்டு வர ஒரு அன்பின் தேவன் உங்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறார். அவரே உங்களது நிச்சயமான நம்பிக்கை. அவரது பெயர் இயேசு.

பாவமில்லாத தேவனுடைய குமாரனாகிய இந்த இயேசு, கைவிடப்பட்டு, தாழ்மைப்படுத்தப் பட்ட நேரத்தில் உங்களோடு இருக்க வாஞ்சிக்கிறார். ஏசாயா 53:2-6 வரையிலுள்ள வசனங்களில் ஏசாயா தீர்க்கதரிசி இயேசுவைக் குறித்து, அவர் எல்லோராலும் “அசட்டை பண்ணப்பட்டவரும், புறக்கணிக்கப்பட்டவரும்” என்று சித்தரிக்கிறார். அவரது வாழ்வு முழுவதும் துக்கம் மற்றும் பாடுகள் நிறைந்ததாயிருந்தது. ஆனால் அவர் சுமந்த துக்கம் அவருடையதல்ல, நம்முடையது ஆகும். அவர் குத்தப்பட்டு, காயப்படுத்தப்பட்டு, நொறுக்கப்பட்டார், எல்லாமே நம்முடைய பாவங்களுக்காக தான். அவருடைய பாடுகளினாலே, நம்முடைய வாழ்வு மீட்கப்பட்டு, முழுமையடையக் கூடும்.

நண்பரே, உங்களுடைய பாவங்கள் யாவும் மன்னிக்கப்பட வேண்டுமென்பதற்காக தான் இயேசு இவை எல்லாவற்றையும் சகித்தார். நீங்கள் எவ்வளவு பெரிய குற்றச்சுமையை சுமந்துகொண்டு இருந்தாலும் சரி, நீங்கள் தாழ்மையோடு அவரை உங்களது இரட்சகராக ஏற்றுக்கொண்டால், அவர் உங்களை மன்னிப்பார் என்பதை அறிந்துகொள். “...ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு; நான் உன்னை விடுவிப்பேன்...” (சங்கீதம் 50:15). நீங்கள் செய்த பாவம் எவ்வளவு பெரியதாயிருந்தாலும், இயேசுவிற்கு அது ஒன்றுமே இல்லை, அவரால் உங்கள் எல்லா பாவத்தையும் மன்னிக்கமுடியும். அவரது ஒரு சில பிரியமான தாசர்கள் கூட மோசமான பாவங்களான கொலை (மோசே), விபச்சாரம் மற்றும் கொலை (தாவீது ராஜா), உடல் மற்றும் உணர்வுரீதியாகக் காயப்படுத்துதல் (பவுல் அப்போஸ்தலன்) போன்றவைகளை செய்திருக்கின்றனர். ஆனாலும் அவர்கள் தேவனிடத்தில் இருந்து மன்னிப்பைப் பெற்று, தேவனுக்குள் புதிய வாழ்வைக் கண்டடைந்தனர். “இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின!” (2 கொரிந்தியர் 5:17).

ஏன் நீங்கள் தற்கொலை செய்துகொள்ளக்கூடாது? நண்பரே, தேவன் “உடைந்ததைச்” சரிசெய்யத் தயாராக நின்றுகொண்டு இருக்கிறார், அதாவது உங்களுடைய வாழ்வை தற்கொலை செய்துகொள்வது மூலம் முடித்துக்கொள்ள எண்ணின உங்களுடைய வாழ்வை சரிசெய்யத் தேவன் தயாராக இருக்கிறார். ஏசாயா 61:1-3ல் ஏசாயா தீர்க்கதரிசி, “சிறுமைப்பட்டவர்களுக்குச் சுவிசேஷத்தை அறிவிக்கக் கர்த்தர் என்னை அபிஷேகம்பண்ணினார்; இருதயம் நொறுங்குண்டவர்களுக்குக் காயங்கட்டுதலையும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், கட்டுண்டவர்களுக்குக் கட்டவிழ்த்தலையும் கூறவும், கர்த்தருடைய அநுக்கிரகவருஷத்தையும்... துயரப்பட்ட அனைவருக்கும் ஆறுதல் செய்யவும், அவர்களுக்குச் சாம்பலுக்குப் பதிலாகச் சிங்காரத்தையும், துயரத்துக்குப் பதிலாக ஆனந்த தைலத்தையும், ஒடுங்கின ஆவிக்குப் பதிலாகத் துதியின் உடையையும் கொடுக்கவும், அவர் என்னை அனுப்பினார்” என்று எழுதுகிறார்.

இயேசுவினிடத்திற்கு வாருங்கள், நீங்கள் ஒரு புதிய வாழ்வை தொடங்கி நீங்கள் இழந்துபோன உங்களுடைய சந்தோஷத்தை புதுப்பித்து பிரயோஜனமுள்ளவராக மாற, அவரை அனுமதியுங்கள். அவர் உங்களை புதிப்பித்து, உங்களை நிலைநிறுத்தி ஒரு புதிய ஆவியை உங்களுக்கு தருவேன் என்று வாக்களிக்கிறார். உங்களுடைய உடைந்து போன இருதயம் அவருக்கு விலையேறப்பெற்றது: “தேவனுக்கேற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவிதான்; தேவனே, நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தை நீர் புறக்கணியீர்” (சங்கீதம் 51:12, 15-17).

ஆண்டவரை உங்களுடைய இரட்சராகவும் மேய்ப்பராகவும் ஏற்றுக் கொள்வீர்களா? அவர் உங்களுடைய நினைவுகளையும் வழிகளையும் ஒவ்வொரு நாளும் அவரது வார்த்தையின் (வேதாகமம்) மூலம் வழி நடத்துவார். “நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன்” (சங்கீதம் 32:8). “பூரணரட்சிப்பும் ஞானமும் அறிவும் உன் காலங்களுடைய உறுதியாயிருக்கும்; கர்த்தருக்குப் பயப்படுதலே அதின் பொக்கிஷம்” (ஏசாயா 33:6). கிறிஸ்துவுக்குள்ளிருக்கும்போதும் உங்களுக்கு இன்னல்கள் வரலாம். ஆனால் இப்போது உங்களுக்கு அதிக நம்பிக்கையுண்டாயிருக்கும். அவரே “சகோதரனிலும் அதிக சொந்தமாய் சிநேகிப்பவர்” (நீதிமொழிகள் 18:24). நீங்கள் தீர்மானிக்கும் தீர்மானத்தில் கர்த்தராகிய இயேசுவினுடைய கிருபை உங்களோடு இருப்பதாக!

நீங்கள் இயேசுகிறிஸ்துவை உங்கள் இரட்சகராக நம்பிட விரும்பினால், இந்த வார்த்தைகளை உன் இருதயத்தில் தேவனோடு பேசுங்கள்: “ஆண்டவரே, என்னுடைய வாழ்வில் நீர் தேவை. தயவாய் நான் செய்த எல்லாவற்றையும் மன்னியும். நான் எனது விசுவாசத்தை இயேசு கிறிஸ்துவின் மேல் வைக்கிறேன். மேலும் அவரே என் இரட்சகர் என்று முழுமனதோடு நம்புகிறேன். தயவாய் என்னைக் கழுவி, சுகமாக்கி, என் வாழ்வில் சந்தோஷத்தைத் திரும்பத்தாரும். என் மேல் நீர் வைத்திருக்கிற அன்பிற்க்காகவும், எனக்குப் பதிலாக மரித்த இயேசுவின் மரணத்திற்காகவும் உமக்கு நன்றி செலுத்துகிறேன்.”

நீங்கள் இங்கே வாசித்த காரியங்கள் நிமித்தம் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வதற்கு தீர்மானித்திருக்கிறீர்களா? அப்படியானால், கீழேயுள்ள “கிறிஸ்துவை நான் இன்று ஏற்றுக்கொண்டிருக்கிறேன்” என்கிற பொத்தானை அழுத்தவும்.



English



முகப்பு பக்கம்

நான் ஏன் தற்கொலை செய்துகொள்ள கூடாது?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries