settings icon
share icon
கேள்வி

கிறிஸ்தவர்கள் பழைய ஏற்பாட்டு நியாயப்பிரமாணத்திற்கு கீழ்ப்படிய வேண்டுமா?

பதில்


கிறிஸ்தவர்கள் பழைய ஏற்பாட்டு நியாயப்பிரமாணத்திற்கு கீழ்ப்படிய வேண்டுமா? அல்லது வேண்டாமா? என்கிற கேள்விக்கு பதிலை அறிந்துகொள்ள முதலாவது, நாம் புரிந்துகொள்ள வேண்டிய காரியம் என்னவென்றால், பழைய ஏற்பாட்டு நியாயப்பிரமாணம் இஸ்ரவேல் தேசத்தாருக்கு அளிக்கப்பட்டதேயன்றி கிறிஸ்தவர்களுக்கல்ல என்பதாகும். எவ்வாறு தேவனுக்குக் கீழ்ப்படிந்து தேவனுக்கு பிரியமாக நடந்துகொள்ளவேண்டும் என்பதற்காக சில பிரமாணங்கள் இஸ்ரவேலர்களுக்கு வெளிப்படுத்தப்பட்டது. உதாரணமாக, பத்து கட்டளைகள். எவ்வாறு தேவனை ஆராதிக்க வேண்டும் மற்றும் பாவநிவாரண பலியை ஏறெடுப்பதற்காகவும் சில பிரமாணங்கள் இஸ்ரவேலர்களுக்கு வெளிப்படுத்தப்பட்டது. உதாரணமாக பலி முறைமைகள் குறித்த பிரமாணங்கள். மற்ற ஜாதிகளிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டவர்களாக இருக்கும்போருட்டாக சில பிரமாணங்கள் கொடுக்கப்பட்டது. உதாரணமாக, உணவு மற்றும் ஆடைகளைக் குறித்த பிரமாணங்கள். இந்த பழைய ஏற்பாட்டு நியாயப்பிரமாணம் ஒன்றும் இன்று கிறிஸ்தவர்களை கட்டுப்படுத்துகிறதில்லை. இயேசு சிலுவையில் மரித்த போது, பழைய ஏற்பாட்டு நியாயப்பிரமாணத்திற்கு ஒரு முடிவுண்டாக்கி விட்டார் (ரோமர் 10:4; கலாத்தியர் 3:23-25; எபேசியர் 2:15).

பழைய ஏற்பாட்டு நியாயப்பிரமாணத்திற்கு பதிலாக, நாம் இன்று கிறிஸ்துவின் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிருக்கிறோம் (கலாத்தியர் 6:2), அதாவது “உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக... உன்னிடத்தில் நீ அன்பு கூருவது போல பிறனிடத்திலும் அன்புகூருவாயாக” (மத்தேயு 22:37-39). நாம் இந்த இரண்டு கற்பனைகளுக்கும் கீழ்ப்படிந்து நடப்போமானால், கிறிஸ்து நம்மிடம் எதிர்பார்க்கிற அனைத்தையும் நிறைவேற்றுகிறவர்களாக இருப்போம்: “இவ்விரண்டு கற்பனைகளிலும் நியாயப்பிரமாணம் முழுமையும் தீர்க்கதரிசனங்களும் அடங்கியிருக்கிறது” (மத்தேயு 22:40). அதற்காக பழைய ஏற்பாட்டு நியாயப்பிரமாணம் இன்று உகந்ததல்ல மற்றும் பிரயோஜனமற்றது என்று நாம் எண்ணிவிடக் கூடாது. பழைய ஏற்பாட்டு நியாயப்பிரமாணத்தில் பெரும்பாலனவைகள் “தேவனிடத்தில் அன்புகூருவாயாக” மற்றும் “பிறனிடத்தில் அன்புகூருவாயாக” என்கிற இரண்டு கட்டளைகளில் அடங்கி விடுகின்றன. நாம் தேவனிடத்திலும் பிறரிடத்திலும் எவ்வாறு அன்புகூர வேண்டுமென்பதற்கு ஒரு நல்ல வழிகாட்டியே பழைய ஏற்பாட்டு நியாயப்பிரமாணம் இருக்கிறது. அதேவேளையில், பழைய ஏற்பாட்டு நியாயப்பிரமாணம் கைகொண்டு கீழ்படிந்து கடைபிடிக்க இன்று இருக்கிற கிறிஸ்தவர்களுக்கும் பொருந்தும் என்று சொல்லுவது தவறானது ஆகும். பழைய ஏற்பாட்டின் நியாயப்பிரமாணம் ஒரு பிரிவு/அலகு ஆகும் (யாக்கோபு 2:10). ஒன்று எல்லா நியாயப்பிரமாண சட்டங்களும் பொருந்தும் அல்லது ஒரு நியாயப்பிரமாண சட்டங்களும் பொருந்தாது. உதாரணமாக, பழைய ஏற்பாட்டின் பலி முறைமைகள் ஆசரிக்கப்படவேண்டிய சட்டங்கள் யாவும் கிறிஸ்துவில் நிறைவேறியாயிற்று. ஆம் கிறிஸ்து பழைய ஏற்பாட்டு நியாயப்பிரமாணமத்தின் அனைத்து நிபந்தனைகளையும் நிறைவேற்றிவிட்டார்.

“நாம் தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்வதே அவரிடத்தில் அன்புகூருவதாம்; அவருடைய கற்பனைகள் பாரமானவைகளுமல்ல” (1 யோவான் 5:3). பழைய ஏற்பாட்டு அனைத்து நியாயப்பிரமாணங்களின் இரத்தினச்சுருக்கமே பத்துக் கட்டளைகள். இந்த பத்துக் கட்டளைகளில் ஒன்றை தவிர்த்து மீதமுள்ள ஒன்பது கற்பனைகளும் புதிய ஏற்பாட்டில் தெளிவாகக் மேற்கோள் காட்டி குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது ஓய்வு நாள் ஆசரிப்பு தவிர, பிற கட்டளைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. நாம் தேவனில் அன்புகூருவோமானால் நிச்சயமாகவே நாம் அன்னிய தேவர்களை நமஸ்கரிக்கவோ விக்கிரங்களுக்கு முன்பாக தலை வணங்கி நிற்கவோ மாட்டோம். அதுபோலவே, நாம் பிறரை நேசிப்போமானால் சக மனிதர்களுக்கு விரோதமாக கொலை, பொய், விபச்சாரம், பொருள் அபகரிப்பு போன்ற செயல்களில் ஈடுபடமாட்டோம். பழைய ஏற்பாட்டு நியாயப்பிரமாணத்தின் பிரதான நோக்கமாவது மக்களால் நியாயப்பிரமாணத்தை கடைபிடிக்க முடியாதென்பதை உணர்த்தி அவர்களை இயேசு கிறிஸ்து என்கிற இரட்சகர் தேவை என்பதை சுட்டிக்காண்பிக்கவுமேயாகும் (ரோமர் 7:7-9; கலாத்தியர் 3:24). பழைய ஏற்பாட்டு நியாயப்பிரமாணம் ஒருபோதும் ஒரு உலகாளவிய பிரமாணமாக எல்லா மக்களுக்கும் எல்லா கால கட்டத்திற்கும் உகந்ததாக தேவனால் நியமிக்கப்படவில்லை. நாம் தேவனையும் பிறரையும் நேசிக்கவேண்டும். இவ்விரண்டு கட்டளைகளையும் உண்மையாகக் கடைபிடிப்போமானால் நிச்சயமாகவே தேவன் நம்மிடத்திலிருந்து எதிர்பார்க்கிற அனைத்தையும் நாம் நிறைவேற்றுகிறவர்களாக இருப்போம்.

English



முகப்பு பக்கம்

கிறிஸ்தவர்கள் பழைய ஏற்பாட்டு நியாயப்பிரமாணத்திற்கு கீழ்ப்படிய வேண்டுமா?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries