settings icon
share icon
கேள்வி

நான் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படுவது எப்படி?

பதில்


பரிசுத்த ஆவியில் நிரப்பப்படுவதைக் குறித்து புரிந்து கொள்ள உதவும் ஒரு முக்கியமான வசனம் யோவான் 14:16. இந்த வசனத்தில் இயேசு பரிசுத்த ஆவியானவர் விசுவாசிகளுக்குள் வாசம் செய்வார் அதுவும் நிரந்தரமாக வாசம் செய்வார் என்று வாக்குப் பண்ணியிருக்கிறார். பரிசுத்த ஆவியில் நிரப்பப்படுதல் மற்றும் வாசம் செய்தல் இவை இரண்டிற்கும் உள்ள வித்தியாசத்தை நாம் தெரிந்துக் கொள்வது மிகவும் அவசியம். நிரந்தரமாக பரிசுத்த ஆவி வாசம் செய்தல் என்பது சிலருக்கு மாத்திரம் கிடையாது, எல்லா விசுவாசிகளுக்குமானது. வேதவாக்கியங்களில் அநேக வசனங்கள் இந்த கருத்தை ஆதரிக்கின்றன. முதலாவதாக, பரிசுத்த ஆவி என்பது எல்லா விசுவாசிகளுக்கும் கொடுக்கப்பட்ட ஒரு ஈவு, இயேசுவை விசுவசிப்பதை தவிர வேறு எந்த நிபந்தனையும் இதற்குக் கிடையாது (யோவன் 7:37-39). இரண்டாவதாக, பரிசுத்த ஆவியானவர் ஒருவர் இரட்சிக்கப்படும்போது அவருக்கு அருளப்படுகிறார் (எபேசியர்1:13). கலாத்தியர் 3:2 இந்த சத்தியத்தையே வலியுறுத்துகின்றது. விசுவசிக்கும்போதே ஆவியின் வாசம் செய்தலும் முத்தரிக்கப்படுதலும் நடந்துவிடுகின்றன. மூன்றாவதாக, பரிசுத்த ஆவியானவர் விசுவாசிகளுக்குள் நிரந்தரமாக வாசம் செய்கிறார். பரிசுத்த ஆவியானவர் விசுவாசிகளுக்கு ஒரு அச்சாரமாகவும் அல்லது கிறிஸ்துவுக்குள் எதிர்காலத்தில் எடுத்துக்கொள்ளப்படும் நாளில் மறுரூபமாக்கப்பட ஒரு அடையாளமாகவும் கொடுக்கப்படுகின்றார் ( 2 கொரிந்தியர் 1:22; எபேசியர் 4:30).

இதுவும் எபேசியர் 5:18ல் சொல்லப்பட்டுள்ள பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படுதலும் முற்றிலும் வேறுபட்டதாகும். நாம் பரிசுத்த ஆவியானவருக்கு முற்றிலும் ஒப்புக்கொடுத்து அர்ப்பணிக்கப்பட்டிருக்கும்போது நம்மை அவர் ஆளுகை செய்வதன் மூலம் நம்மை நிரப்புவார். ரோம் 8:9 மற்றும் எபேசியர் 1:13,14 ஆகிய வேதபகுதிகள், ஆவியானவர் எல்லா விசுவாசிகளுக்குள்ளும் வாசம் செய்கிறார் என்று சொல்லுகிறது. ஆனால் அவரை துக்கப்படுத்தி (எபேசியர் 4:30) அவருடைய கிரிகைகளை அவித்துப்போட அல்லது நாம் தடைச்செய்யவும் முடியும் (1 தெசலோனிக்கியர் 5:19). நாம் இதை அனுமதிக்கும்போது ஆவியின் பரிபூரணமான கிரியை நமக்குள்ளும், நம் மூலமாகவும் நடப்பதை நாம் உணரமுடியாது. பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படுதல் என்கிற போது அவர் நம் வாழ்க்கையின் எல்லா பகுதிகளையும் ஆட்கொண்டு, நம்மை வழி நடத்தி, நம்மை அவரது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதாகும். அப்பொழுது அவருடைய வல்லமை நம்மூலமாக வெளிப்பட்டு நாம் தேவனுக்காக செய்கிற காரியங்கள் மிகுந்த பலன் தருகிறதாயிருக்கும். பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படுவது என்பது வெளியரங்கமான செய்கை மட்டும் அல்ல. நம்முடைய எண்ணம், நோக்கம் முழுவதையும் மாற்றக்கூடியதாயிருக்கிறது. சங்கீதம் 19:4 “என் கன்மலையும் என் மீட்பருமாகிய கர்த்தாவே, என் வாயின் வார்த்தைகளும், என் இருதயத்தின் தியானமும் உமது சமூகத்தில் பிரீதியாயிருப்பதாக” என்று கூறுகின்றது.

பாவம் மாத்திரமே பரிசுத்த ஆவியில் நிரப்பப்படுதலை தடைபண்ணுகிறது, தேவனுக்கு கீழ்படிவதினால் மட்டுமே பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட முடியும். எபேசியர் 5:18 நமக்கு கட்டளையிடுகிறது, அதாவது நாம் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு இருக்கவேண்டும் என்று கட்டளையாக ஆணையிடுகிறது. எனினும் ஜெபிப்பதால் நிரப்படுகிறோம் என்று அர்த்தம் ஆகாது. தேவனுடைய கட்டளைகளுக்கு நம்முடைய கீழ்படிதலே பரிசுத்த ஆவியை விடுதலையாய் நமக்குள் வளையவரச் செய்யும். நாம் பாவத்தினால் கறைப்பட்டிருக்கிறதினால்தான் எல்லா நேரத்திலேயும் ஆவியில் நிரப்பப்பட்டு இருப்பது கூடாத காரியமாயிருக்கின்றது. நாம் பாவம் செய்யும்போது உடனே அதை தேவனிடத்தில் அறிக்கை செய்து நம்முடைய அர்ப்பணிப்பை ஆவியானவரால் நிரப்பப்படவும், நடத்தப்படவும் நாம் புதிப்பித்துக் கொள்ள வேண்டும்.

English



முகப்பு பக்கம்

நான் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படுவது எப்படி?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries