settings icon
share icon
கேள்வி

இரட்சிப்பு விசுவாசத்தினால் மட்டுமா அல்லது விசுவாசத்தோடு கிரியைகளுமா?

பதில்


கிறிஸ்தவ இறையியலில் இது ஒரு முக்கியமான கேள்வியாகும். இந்தக் கேள்வி தான் ரோமன் கத்தோலிக்க சபைக்கும் சீர்திருத்த சபைகளுக்கும் இடையே பிரிவுண்டாக்கி மறுமலர்ச்சிக்கு வருவதற்கு வழிவகுத்தது. இந்தக் கேள்விக்கான பதில்தான் வேதாகமக் கிறிஸ்தவத்திற்கும், பல கள்ள கிறிஸ்தவ போதனைகளுக்கும் உள்ள மிக முக்கியமான வேறுபாடு. இரட்சிப்பு விசுவாசத்தினால் மட்டுமா அல்லது விசுவாசத்தோடு கிரியைகளுமா? இயேசுவில் நம்பிக்கை மட்டும் வைப்பதால் நான் இரட்சிக்கப் படக்கூடுமா அல்லது இயேசுவில் நம்பிக்கை வைப்பதோடு கூட ஒரு சில காரியங்களையும் செய்யவேண்டுமா?

வேதத்திலுள்ள ஒரு சில புரிந்து கொள்ளக் கடினமான வசனங்களால் இந்தக் கேள்விக்கான விடை சிக்கலானதாக மாறியுள்ளது. ரோமர் 3:28, 5:1 மற்றும் கலாத்தியர் 3:24 ஆகிய வசனங்களை யாக்கோபு 2:24 கூட ஒப்பிட்டுப் பார்க்கவும். ஒரு சிலர் பவுலுக்கும் (அதாவது இரட்சிப்பு விசுவாசத்தினால் மட்டும்) யாக்கோபுக்கும் (அதாவது இரட்சிப்பு விசுவாசத்தோடு கிரியைகளும்) இடையில் ஒரு வேறுபாட்டைக் காண்கின்றனர். பவுல் விசுவாசத்தினால் மட்டுமே நீதிமானாக்கப்படமுடியும் என்று கூறுகின்றார் (எபேசியர் 2:8-9). யாக்கோபோ விசுவாசத்தோடு சேர்ந்து கிரியைகளினாலே தான் நீதிமானாக்கப்படமுடியும் என்று கூறுவதாகத் தோன்றுகிறது. உண்மையிலேயே யாக்கோபு என்ன கூறுகின்றார் என்பதை ஆராய்ந்து பார்ப்பதின் மூலமே இந்த வெளிப்படையான சிக்கலுக்குத் ஒரு தீர்வு காண முடியும். ஒரு மனிதன் விசுவாசத்தைக் கொண்டிருந்து நற்கிரியை இல்லாமல் இருக்கமுடியும் என்ற தவறான நம்பிக்கையை கண்டிக்கிறார் யாக்கோபு (யாக்கோபு 2:17-18). கிறிஸ்துவின் மேலுள்ள மெய்யான விசுவாசம் மாற்றப்பட்ட வாழ்க்கை மற்றும் நற்கிரியைகளைப் பலனாய்த் தரும் என்ற கூற்றை யாக்கோபு வலியுறுத்துகின்றார். இந்த இடத்தில் யாக்கோபு விசுவாசத்தோடு கிரியைகளினாலே தான் நீதிமானாக்கப்படமுடியும் என்று கூறவில்லை, ஆனால் விசுவாசத்தினால் நீதிமானாக்கப்பட்ட ஒருவரின் வாழ்வில் நற்கிரியைகளைக் காணமுடியும் அல்லது காணவேண்டும் என்று கூறுகின்றார். ஒருவர் தான் விசுவாசி என்று கூறிக்கொண்டு, அவரது வாழ்வில் நற்கிரியைகள் இல்லையென்றால் கிறிஸ்துவின் மேலுள்ள அவரது விசுவாசம் மெய்யானதாயிருக்காது (யாக்கோபு 2:14, 17, 20, 26).

பவுலும் இதே காரியத்தைத்தான் தனது நிரூபங்களில் கூறுகின்றார். கலாத்தியர் 5:22-23 ல் விசுவாசிகளின் வாழ்வில் இருக்க வேண்டிய நல்ல கனிகளைப் பட்டியலிடுகின்றார். நாம் கிரியைகளினாலே அல்ல விசுவாசத்தினாலே இரட்சிக்கப்பட்டுள்ளோம் (எபேசியர் 2:8-9) என்று கூறிய மறுகணமே நாம் நற்கிரியைகளைச் செய்வதற்காகவே சிருஷ்டிக்கப்பட்டோம் என்று பவுல் எடுத்துரைக்கிறார் (எபேசியர் 2:10). யாக்கோபைப் போலவே பவுலும் அதே அளவிலான மாற்றப்பட்ட வாழ்க்கையை எதிர்பார்க்கிறார்: “இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள் இருந்தால் புதுச்சிருஷ்டியாய் இருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின” (2 கொரிந்தியர் 5:17). யாக்கோபும் பவுலும் இரட்சிப்பைக் குறித்த தங்களது போதனைகளில் எந்த விதத்திலும் வேறுபடவில்லை. அவர்கள் இருவரும் ஒரே காரியத்தை வெவ்வேறு கோணங்களில் அணுகுகின்றனர். பவுல் விசுவாசத்தினால் மட்டுமே நீதிமானாக்கப்பட முடியும் என்று எடுத்துரைக்க, யாக்கோபோ கிறிஸ்துவின் மேலுள்ள உண்மையான விசுவாசம் நற்கிரியைகளைப் பலனாய்த் தரும் என்ற உண்மையை எடுத்துரைக்கிறார்.

English



முகப்பு பக்கம்

இரட்சிப்பு விசுவாசத்தினால் மட்டுமா அல்லது விசுவாசத்தோடு கிரியைகளுமா?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries