settings icon
share icon
கேள்வி

வேதனையைப் பற்றி வேதாகமம் என்ன சொல்லுகிறது?

பதில்


"வேதனை" என்ற வார்த்தை அல்லது அதன் சில வடிவம் வேதத்தில் 70 தடவைகளுக்கு மேல் காணப்படுகிறது. இந்த வார்த்தையின் முதல் பயன்பாடு பிரசவ வேதனையின் தோற்றத்தை விளக்குகிறது: "அவர் ஸ்திரீயை நோக்கி: நீ கர்ப்பவதியாயிருக்கும்போது உன் வேதனையை மிகவும் பெருகப்பண்ணுவேன்; வேதனையோடே பிள்ளை பெறுவாய்; உன் ஆசை உன் புருஷனைப் பற்றியிருக்கும், அவன் உன்னை ஆண்டுகொள்ளுவான் என்றார்” (ஆதியாகமம் 3:16). இங்குள்ள சூழல் என்னவென்றால், ஆதாமும் ஏவாளும் பாவம் செய்தார்கள் மற்றும் பிரசவ வேதனை பாவத்தின் விளைவுகளில் ஒன்றாகும். பாவத்தின் காரணமாக, முழு பூமியும் சபிக்கப்பட்டது, அதன் விளைவாக மரணம் பிரவேசித்தது (ரோமர் 5:12). எனவே, முதல் பாவத்தின் பல விளைவுகளில் வேதனையும் ஒன்று என்று முடிவு செய்யலாம்.

வேதாகமத்தில் குறிப்பிடப்படவில்லை என்றாலும், வேதனை என்பது ஒரு பரிசு என்று மருத்துவ ரீதியாக நாம் அறிவோம். அது இல்லாமல், நமக்கு எப்போது மருத்துவ உதவி தேவை என்று தெரிய வாய்ப்பில்லை. உண்மையில், வேதனை இல்லாதது தொழுநோயுடன் தொடர்புடைய பிரச்சனைகளில் ஒன்றாகும். சூடான அடுப்பைத் தொடுவது ஒரு மோசமான யோசனை என்பதை குழந்தைகள் ஒருபோதும் கற்றுக்கொள்ள மாட்டார்கள், அல்லது அதனுடன் தொடர்புடைய வலி இல்லாமல் ஆபத்தான மருத்துவ நிலை குறித்து நாம் எச்சரிக்கப்பட மாட்டோம். ஆவிக்குரிய ரீதியில், வேதனையின் பலன்களில் ஒன்று யாக்கோபினால் வெளிப்படுத்தப்படுகிறது: "என் சகோதரரே, நீங்கள் பலவிதமான சோதனைகளில் அகப்படும்போது, உங்கள் விசுவாசத்தின் பரீட்சையானது பொறுமையை உண்டாக்குமென்று அறிந்து, அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்க" (யாக்கோபு 1:2-3). யாக்கோபின் கூற்றுப்படி, வேதனைமிகுந்த சோதனைகளை நாம் சகித்துக் கொள்ளும்போது, சகிப்புத்தன்மையையும் கிறிஸ்துவைப் போன்ற குணத்தையும் உருவாக்க தேவன் நம்மில் செயல்படுகிறார் என்பதை அறிந்து நாம் மகிழ்ச்சியடையலாம். இது மன ரீதியான, உணர்ச்சி மற்றும் ஆவிக்குரிய வேதனை மற்றும் சரீர வேதனைக்கும் பொருந்தும்.

வேதனை ஒருவருக்கு தேவனுடைய கிருபையை அனுபவிக்கும் வாய்ப்பையும் வழங்குகிறது. பவுல் சொன்னதைக் கவனியுங்கள்: “என் கிருபை உனக்குப்போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும்” (2 கொரிந்தியர் 12:9). பவுல் தன்னைத் தொந்தரவு செய்யும் "அவரது மாம்சத்தில் உள்ள ஒரு முள்" பற்றிப் பேசுகிறார். அது என்னவென்று நமக்குத் தெரியாது, ஆனால் பவுலுக்கு அது வேதனையாக இருந்தது. தேவனுடைய கிருபை தனக்கு வழங்கப்படுவதை அவர் உணர்ந்தார், அதனால் அவர் தாங்கிக்கொள்ள முடியும். தேவன் தம் பிள்ளைகளுக்கு வேதனையைத் தாங்கும் கிருபையைத் தருவார்.

ஆனால் உண்மையில் நற்செய்தி என்னவென்றால், நம்முடைய பாவங்களுக்காக இயேசு நம் ஸ்தானத்தில் மரித்தார்: “ஏனெனில், கிறிஸ்துவும் நம்மைத் தேவனிடத்தில் சேர்க்கும்படி அநீதியுள்ளவர்களுக்குப் பதிலாக நீதியுள்ளவராய்ப் பாவங்களினிமித்தம் ஒருதரம் பாடுபட்டார்; அவர் மாம்சத்திலே கொலையுண்டு, ஆவியிலே உயிர்ப்பிக்கப்பட்டார்” (1 பேதுரு 3:18). இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பதன் மூலம், தேவன் விசுவாசிக்கு நித்திய ஜீவனையும் உள்ளடக்கிய அனைத்து ஆசீர்வாதங்களையும் தருகிறார். அதில் ஒன்று “அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின” (வெளிப்படுத்துதல் 21:4). விழுந்துபோன, பாவத்தால் சபிக்கப்பட்ட இந்த உலகில் வாழ்வதன் இயல்பான பகுதியாக நாம் அனுபவிக்கும் வலி அல்லது வேதனை, கிறிஸ்துவில் விசுவாசத்தின் மூலம், அவருடன் பரலோகத்தில் நித்தியத்தை செலவிடுபவர்களுக்கு கடந்த காலத்தின் ஒரு விஷயமாக இருக்கும்.

சுருக்கமாக, வேதனை இனிமையானதாக இல்லாவிட்டாலும், அதற்காக நாம் தேவனுக்கு நன்றிச் சொல்ல வேண்டும், ஏனென்றால் அது நம் உடலில் ஏதோ தவறு இருப்பதாக எச்சரிக்கிறது. மேலும், பாவத்தின் மோசமான விளைவைப் பற்றி சிந்திக்கவும், நாம் இரட்சிக்கப்படுவதற்கு ஒரு வழியை உருவாக்கியதற்காக தேவனுக்கு மிகவும் நன்றியுள்ளவர்களாகவும் இருக்கவும் செய்கிறது. ஒருவர் வேதனையில் இருக்கும்போது, இயேசு நமக்காக உணர்ச்சி மற்றும் உடல் ரீதியான வேதனைகளை அனுபவித்தார் என்பதை உணர இது ஒரு சிறந்த நேரம். இயேசுவின் சிலுவையில் அறையப்பட்ட கொடூரமான நிகழ்வுகளை அணுகக்கூடிய எந்த வலியும் இல்லை, மேலும் அவர் நம்மை மீட்டு அவரது பிதாவை மகிமைப்படுத்த மனமுவந்து அந்த வேதனையை அனுபவித்தார்.

English



முகப்பு பக்கம்

வேதனையைப் பற்றி வேதாகமம் என்ன சொல்லுகிறது?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries