settings icon
share icon
கேள்வி

தேவனிடத்தில் கோபமாக இருப்பது தவறா?

பதில்


தேவன் மீது கோபம் கொள்வது என்பது பல மக்கள், விசுவாசிகள் மற்றும் அவிசுவாசிகள் என இரு தரப்பினரும் காலம் முழுவதும் போராடுகிற ஒரு காரியமாகும். நம் வாழ்வில் ஏதாவது துயரம் நிகழும்போது, தேவனிடம், "ஏன்?" என்ற கேள்வியைக் கேட்கிறோம். ஏனெனில் அது நமது இயல்பான மாறுத்திரமாக இருக்கிறது. உண்மையில் நாம் அவரிடம் கேட்பது, "ஏன் தேவனே?" "எனக்கு ஏன் தேவனே?" இந்த பதில் நம் சிந்தனையில் உள்ள இரண்டு குறைபாடுகளைக் குறிக்கிறது. முதலில், விசுவாசிகளாகிய நாம் வாழ்க்கை எளிதாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்படுகிறோம், மேலும் தேவன் நமக்கு துயரம் ஏற்படாமல் தடுக்க வேண்டும். அவர் அவ்வாறு செய்யாதபோது, நாம் அவரிடம் கோபப்படுகிறோம். இரண்டாவதாக, தேவனுடைய ராஜ்யபாரத்தின் அளவை நாம் புரிந்து கொள்ளாதபோது, சூழ்நிலைகள், மற்றவர்கள் மற்றும் அவைகள் நம்மை பாதிக்கும் விதம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் அவரது திறனில் நாம் நம்பிக்கையை இழக்கிறோம். நாம் தேவன் மீது கோபம் கொள்கிறோம், ஏனெனில் அவர் பிரபஞ்சத்தின் கட்டுப்பாட்டை இழந்துவிட்டதாகவும், குறிப்பாக நம் வாழ்வின் கட்டுப்பாட்டை இழந்துவிட்டதாகவும் நமக்கு தெரிகிறதே அதற்கு காரணம். நாம் தேவனுடைய ராஜ்யபாரத்தில் நம்பிக்கையை இழக்கும்போது, அது நமது பலவீனமான மனித மாம்சம் நம் சொந்த விரக்தி மற்றும் நிகழ்வுகள் மீதான நமது கட்டுப்பாடு இல்லாததால் போராடுகிறது. நல்ல விஷயங்கள் நடக்கும்போது, நாம் அனைவரும் அடிக்கடி அதை நம் சொந்த சாதனைகள் மற்றும் வெற்றிகொண்டவை என்பதாக கூறுகிறோம். தீய விஷயங்கள் நடக்கும்போது, நாம் உடனே தேவனைக் குற்றம் சாட்டுகிறோம், அதைத் தடுக்காததால் நாம் அவரிடம் கோபப்படுகிறோம், இது நம் சிந்தனையின் முதல் குறைபாட்டைக் குறிக்கிறது அதாவது விரும்பத்தகாத சூழ்நிலைகளில் இருந்து நாம் தப்பிக்க தகுதியானவர்கள்.

நாம் பொறுப்பாளிகள் இல்லை என்கிற பரிதாபகரமான உண்மையை துயரங்கள் வீட்டிற்கு கொண்டு வருகின்றன. சூழ்நிலைகளின் விளைவுகளை நம்மால் கட்டுப்படுத்த முடியும் என்று நாம் அனைவரும் ஒரு நேரத்தில் அல்லது இன்னொரு நேரத்தில் நினைக்கிறோம், ஆனால் உண்மையில் தேவன்தான் அவருடைய சிருஷ்டிப்பு அனைத்திற்கும் பொறுப்பாக இருக்கிறார். சம்பவிக்கும் சம்பவங்கள் அனைத்தும் தேவனால் நடந்தேறுபவை அல்லது அவரால் அனுமதிக்கப்பட்டவை ஆகும். தேவனை அறியாமல் ஒரு அடைக்கலான் குருவி போலும் தரையில் விழுவதில்லை அல்லது நம் தலையில் இருந்து ஒரு முடியும் விழுவதில்லை (மத்தேயு 10:29-31). என்ன சம்பவிக்கிறது என்பதற்காக நாம் தேவனிடம் குறை தெரிவிக்கலாம், கோபமடையலாம், மற்றும் குற்றம் சாட்டலாம். இருந்தபோதிலும் நாம் அவரை நம்பி நம் கசப்பையும் வலியையும் அவருக்கு அளித்தால், நம்முடைய சொந்த விருப்பத்தை அவர் மீது திணிக்க முயலும் பெருமையின் பாவத்தை ஒப்புக்கொண்டால், அவர் எந்த ஒரு கடினமான சூழ்நிலையிலும் நாம் கடந்துபோகத்தக்கதாக சமாதானத்தையும் பெலனையும் அளிக்க முடியும் (1 கொரிந்தியர் 10:13). இந்த உண்மையை இயேசு கிறிஸ்துவில் விசுவாசிக்கிற பல விசுவாசிகள் சாட்சியாக கூற முடியும். பல காரணங்களுக்காக நாம் தேவன் மீது கோபம் கொள்ள முடியும், ஆனாலும் நம்மால் கட்டுப்படுத்த முடியாத அல்லது புரிந்துகொள்ள முடியாத விஷயங்கள் உள்ளன என்பதை நாம் அனைவரும் ஒரு கட்டத்தில் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

எல்லா சூழ்நிலைகளிலும் தேவனுடைய ராஜ்யபாரத்தைப் புரிந்துகொள்வது அவருடைய மற்ற பண்புகளைப் புரிந்துகொள்வதிலும் இசைந்திருக்க வேண்டும்: அன்பு, இரக்கம், தயவு, நற்குணம், நீதி, நியாயம் மற்றும் பரிசுத்தம். தேவனுடைய வார்த்தையின் சத்தியத்தின் மூலம் நம் கஷ்டங்களை நாம் காணும்போது, நம்முடைய அன்பும் பரிசுத்தமுமுள்ள தேவன் நம் நன்மைக்காக சகலத்தையும் நடந்தேறச் செய்கிறார் (ரோமர் 8:28) என்றும், மேலும் அவர் நமக்கு வைத்திருக்கும் ஒரு சரியான திட்டத்தையும் நோக்கத்தையும் யாராலும் முறியடிக்க முடியாது என்றும் தெளிவாகிறது (ஏசாயா 14:24, 46:9-10), இதனிமித்தம் நாம் நமது பிரச்சினைகளை வேறு கோணத்தில் பார்க்கத் தொடங்குகிறோம். இந்த வாழ்க்கையானது ஒருபோதும் தொடர்ச்சியாக மகிழ்ச்சியையும் சந்தோஷத்தையும் கொண்டதில்லை என்பதையும் வேதத்திலிருந்து நாம் அறிகிறோம். மாறாக, "அக்கினிப்பொறிகள் மேலே பறக்கிறதுபோல, மனுஷன் வருத்தம் அநுபவிக்கப் பிறந்திருக்கிறான்" (யோபு 5:7) என்றும் மற்றும் மனிதன் "வாழ்நாள் குறுகினவனும் சஞ்சலம் நிறைந்தவனுமாயிருக்கிறான்" என்று யோபு நமக்கு நினைவூட்டுகிறார் (யோபு 14:1). பாவத்திலிருந்து கிடைக்கும் இரட்சிப்புக்காக நாம் கிறிஸ்துவிடம் வருவது, நமக்கு பிரச்சனைகளற்ற வாழ்வுக்கு உத்தரவாதம் அளிக்கிறது என்று அர்த்தமல்ல. உண்மையில், இயேசு சொன்னார், " உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு", ஆனால் அவர் "உலகத்தை ஜெயித்துவிட்டார்" (யோவான் 16:33), இது நம்மைச் சுற்றி புயல்காற்று இருந்தபோதிலும், நமக்குள் அமைதி பெற உதவுகிறது (யோவான் 14:27).

ஒன்று நிச்சயம்: பொருத்தமற்ற கோபம் பாவம் (கலாத்தியர் 5:20; எபேசியர் 4:26-27, 31; கொலோசெயர் 3:8). தேவபக்தியற்ற கோபம் தன்னைத் தானே தோற்கடித்து, பிசாசுக்கு நம் வாழ்வில் ஒரு இடத்தைக் கொடுக்கிறது, மேலும் நாம் அதில் தொடர்ந்து இருந்தால் பிசாசால் நம் மகிழ்ச்சியையும் அமைதியையும் அழிக்க முடியும். நமது கோபத்தைத் தக்கவைத்துக்கொள்வது கசப்பையும் ஆத்திரத்தையும் நம் இதயங்களில் பொங்கிவர அனுமதிக்கும். நாம் அதை தேவனிடத்தில் ஒப்புக் கொள்ள வேண்டும், பின்னர் அவருடைய மன்னிப்பில், அந்த உணர்வுகளை அவரிடம் விட்டுவிடலாம். நம்முடைய துக்கத்திலும், கோபத்திலும், வேதனையிலும் நாம் அடிக்கடி ஜெபத்தில் தேவனிடம் செல்ல வேண்டும். 2 சாமுவேல் 12:15-23 ல் வேதாகமம் நமக்கு சொல்லுகிறது, தாவீது தனது வியாதிபட்ட குழந்தைக்காக கிருபையின் சிங்காசனத்திற்கு முன் சென்றார், உபவாசம் இருந்தார், அழுதார், குழைந்தை பிழைக்க வேண்டுதல் செய்தார். குழந்தை மரித்தவுடன், தாவீது எழுந்து தேவனைத் தொழுதுகொண்டார், பின்னர் தனது சேவகர்களிடம் தனது குழந்தை எங்கே இருக்கிறது என்று தனக்குத் தெரியும் என்றும், ஒருநாள் அவரும் அங்கே தேவனுடைய சமுகத்தில் அதனோடு இருப்பார் என்றும் கூறினார். குழந்தை வியாதிப்பட்ட போது தாவீது தேவனிடத்தில் மன்றாடினார், அதன் பிறகு அவர் தேவனை ஆராதித்து தொழுதுகொண்டார். அது ஒரு அற்புதமான சாட்சி. தேவன் நம் இதயங்களை அறிந்திருக்கிறார், நாம் உண்மையில் எப்படி உணர்கிறோம் என்பதை மறைக்க முயற்சிப்பது அர்த்தமற்றது, எனவே அவரிடம் வெளிப்படையாக பேசுவதுதான் நம் துயரத்தை கையாள சிறந்த வழிகளில் ஒன்றாகும். நாம் மனத்தாழ்மையுடன், நம் இதயங்களை அவரிடம் ஊற்றினால், அவர் நம் மூலம் செயல்படுவார், மேலும் செயல்முறையில், நம்மை அவரைப் போலாக்குவார்.

முக்கியமான விஷயம் என்னவெனில், நாம் எல்லாவற்றிலும், நம் வாழ்க்கையிலும், நம் அன்புக்குரியவர்களின் வாழ்க்கையிலும் தேவனை நம்ப முடியுமா? நிச்சயமாக நம்மால் முடியும்! நம் தேவன் இரக்கமுள்ளவர், கிருபையும் அன்பும் நிறைந்தவர், கிறிஸ்துவின் சீடர்களாகிய நாம் அவரை எல்லாவற்றிலும் நம்பலாம். நமக்கு துயரங்கள் ஏற்படும்போது, தேவன் நம்மை அவரிடம் நெருங்கி வரவும், நம் விசுவாசத்தை மேலும் வலுப்படுத்தவும், நம்மை முதிர்ச்சியையும் முழுமையுமாக கொண்டு வர அவைகளை பயன்படுத்த முடியும் என்பதை நாம் அறிவோம் (சங்கீதம் 34:18; யாக்கோபு 1:2-4). பிறகு, நாம் மற்றவர்களுக்கு ஆறுதலான சாட்சியாக இருக்க முடியும் (2 கொரிந்தியர் 1:3-5). இருப்பினும், இதைச் சொல்வதை விட எளிதானது. தேவனுடைய வார்த்தையில் காணப்பட்ட அவரது பண்புகளை உண்மையாகப் படிப்பது, அதிகமாக ஜெபம் செய்வது, பின்னர் நாம் கற்றதை நம்முடைய சொந்த சூழ்நிலையில் நடைமுறைப்படுத்துவதாகும், அவ்வாறு செய்வதன் மூலம், நமது நம்பிக்கை படிப்படியாக வளர்ந்து, முதிர்ச்சியடையும், மேலும் நிச்சயமாக சம்பவிக்கும் அடுத்த துயரத்தின் மூலம் நாம் அவரை நம்புவதை எளிதாக்குகிறது.

எனவே, கேள்விக்கு நேரடியாக பதிலளித்தோமானால், ஆம், தேவன் மீது கோபம் கொள்வது தவறு. தேவனின் மீதான கோபம், அவர் என்ன செய்கிறார் என்பது நமக்குப் புரியவில்லை என்கிறபோதிலும் தேவனை நம்புவதற்கான நமது இயலாமை அல்லது விருப்பமின்மையின் விளைவாகும். தேவன் மீதான கோபம் என்பது, தேவனிடம் அவர் ஏதோ தவறு செய்துவிட்டார் என்று சொல்வதாகும், ஆனால் அவர் அப்படி ஒருபோதும் செய்வதில்லை. நாம் தேவனிடம் கோபமாக, விரக்தியாக அல்லது ஏமாற்றமாக இருக்கும்போது அவர் புரிந்துகொள்கிறாரா? ஆம், அவர் நம் இதயங்களை அறிவார், இந்த உலகில் வாழ்க்கையானது எவ்வளவு கடினமானது மற்றும் வேதனையானது என்பதையும் அவர் அறிவார். தேவன் மீது கோபப்படுவது சரியா? முற்றிலும் இல்லை. தேவனிடம் கோபப்படுவதற்குப் பதிலாக, நாம் நம் இதயங்களை தேவனிடம் ஜெபத்தில் ஊற்ற வேண்டும், பின்னர் அவர் சகலத்தையும் தமது கட்டுப்பாட்டில் கொண்டிருக்கிறார் என்றும் அவருடைய திட்டம் சரியானது என்றும் நாம் நம்ப வேண்டும்.

English



முகப்பு பக்கம்

தேவனிடத்தில் கோபமாக இருப்பது தவறா?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries