settings icon
share icon
கேள்வி

பரிசுத்தமான சிரிப்பு என்றால் என்ன?

பதில்


"பரிசுத்தமான சிரிப்பு" என்ற வார்த்தை ஒரு நிகழ்வை விவரிக்க உருவாக்கப்பட்டது, இந்த நிகழ்வின்போது ஒருவர் கட்டுப்பாடில்லாமல் சிரிக்கிறார், இது பரிசுத்த ஆவியின் சந்தோஷத்தால் நிரப்பப்பட்டதன் விளைவாக இருக்கலாம். இது அடக்க முடியாத சிரிப்புகளால் வகைப்படுத்தப்படுகிறது, சில சமயங்களில் மயக்கம் அல்லது தரையில் விழுகிறதும் சம்பவிக்கிறது. இந்த அனுபவத்தைப் பெற்றவர்களின் நேரடிக் கணக்குகள் ஓரளவு வேறுபடுகின்றன, ஆனால் அனைவரும் இதைப் பரிசுத்த ஆவியின் "ஆசீர்வாதத்தின்" அல்லது "அபிஷேகத்தின்" அடையாளமாக இருப்பதாக நம்புகிறார்கள்.

பரிசுத்தமான சிரிப்பின் அனுபவம், இயல்பிலேயே, ஒரு அகநிலையைச் சார்ந்தது. எனவே, நிகழ்வின் சத்தியத்தைக் கண்டறியும் முயற்சியில், நாம் புறநிலையாக இருக்க முயற்சிக்க வேண்டும். சத்தியத்தைப் பற்றிய நமது வரையறையானது உலக அனுபவத்தைப் பொறுத்தே அமையும் போது, நாம் நமது சிந்தனையில் முற்றிலும் தன்னிச்சையாக மாறுவதற்கு மிகக் குறுகிய வழியாக இருக்கும். சுருக்கமாக கூறுவோமானால், உணர்வுகள் உண்மை என்ன என்பதை நமக்குச் சொல்வதில்லை. உணர்வுகள் மோசமானவை அல்ல, சில சமயங்களில் நம் உணர்வுகள் வேதப்பூர்வமான சத்தியத்துடன் இணைந்திருக்கும். இருப்பினும், அவை பெரும்பாலும் நம் பாவ இயல்புடன் ஒத்துப்போகின்றன. இருதயத்தின் நிலையற்ற தன்மை அதை மிகவும் நம்பமுடியாத திசைகாட்டியாக ஆக்குகிறது. " எல்லாவற்றைப்பார்க்கிலும் இருதயமே திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாயிருக்கிறது, அதை அறியத்தக்கவன் யார்?" (எரேமியா 17:9). இந்த வஞ்சக-இருதயக் கொள்கை குறிப்பாக "பரிசுத்தமான சிரிப்பு" என்று அழைக்கப்படும் நிகழ்வுக்கு பொருந்தும். எழுப்புதல் கூட்டங்களில் ஜனங்கள் கட்டுப்பாடில்லாமல் சிரிக்கத் தொடங்கிவிட்டனர் என்பதில் சந்தேகமில்லை. அது ஒரு உண்மை. ஆனால் உண்மையில் அதன் அர்த்தம் என்ன?

சிரிப்பு வேதாகமத்தில் பல முறை குறிப்பிடப்பட்டுள்ளது. ஆபிரகாம் மற்றும் சாரா ஆகியோர் தங்களுடைய முதுமையில் ஒரு குழந்தையைப் பெறுவார்கள் என்று தேவன் சொன்னபோது நகைத்ததைப் போலவே, கேலி செய்யும் அல்லது இழிவான பதிலை விவரிக்க இது பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. சில வசனங்கள் அதை ஏளனத்தின் அடையாளமாகப் பயன்படுத்துகின்றன (சங்கீதம் 59:8; சங்கீதம் 80:6; நீதிமொழிகள் 1:26), இன்னும் சில, சிரிப்பின் தன்மையைப் பற்றிக் கூர்மையாகக் கூறுகின்றன. உதாரணமாக, சாலமோன், பிரசங்கி 2:2-ல் பின்வரும் அவதானிப்பைக் கூறுகிறார், "நகைப்பைக்குறித்து, அது பைத்தியம் என்றும் சந்தோஷத்தைக்குறித்து, அது என்ன செய்யும்? என்றும் சொன்னேன்," பின்னர் அவர் 7:3 இல், "நகைப்பைப் பார்க்கிலும் துக்கிப்பு நலம்; முகதுக்கத்தினாலே இருதயம் சீர்ப்படும்" என்று கூறுகிறார். நீதிமொழிகள் 14:13 மறுபுறம் இவ்வாறு கூறுகிறது: "நகைப்பிலும் மனதுக்குத் துக்கமுண்டு; அந்த மகிழ்ச்சியின் முடிவு சஞ்சலம்." இந்த இரண்டு வசனங்களும் உண்மை: ஒரு சோகமாக இருக்கும் நபர் தனது சோகத்தை மறைக்க சிரிக்கலாம், ஒரு நபர் அவர் உள்ளத்தில் மகிழ்ச்சியாக இருந்தாலும் அழலாம். எனவே, உணர்ச்சி நமக்கு உண்மையைத் தரத் தவறியது மட்டுமல்லாமல், சிரிப்பு எப்போதும் மகிழ்ச்சியைக் குறிப்பதல்ல, கோபம், சோகம் அல்லது ஏளனம் ஆகியவற்றைக் குறிக்கும் என்பதையும் நாம் காண்கிறோம். அதேபோல், சிரிப்பு இல்லாதது தானாகவே சோகமாக இருக்காது. சிரிப்பது ஒரு அகநிலை அனுபவம்.

"பரிசுத்தமான சிரிப்பு" என்று அழைக்கப்படுவதற்கு எதிரான மிகவும் உறுதியான வேத வாதம் கலாத்தியர் 5:22-23 இல் காணப்படுகிறது. அது கூறுகிறது, "ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை." இச்சையடக்கம் தேவனுடைய ஆவியின் கனியாக இருந்தால், அடக்க முடியாத சிரிப்பும் அவருடைய ஆவியின் கனியாக எப்படி இருக்கமுடியும்? எழுப்புதல் தலைவர்கள் கூறுவது, ஆவியானவரால் "நிரம்பியிருப்பது" என்பது, நாம் அவருடைய விருப்பங்களால் "தூக்கிவிடப்படுகிறோம்" என்பதாகும். ஆனால், ஆவியானவரின் அபிஷேகத்தின் விளைவாக, தேவன் ஜனங்களைக் குடித்துவிட்டுச் சிரிக்க வைப்பார் அல்லது கட்டுப்பாடில்லாமல் சிரிக்க வைப்பார் அல்லது விலங்குகளின் சத்தம் எழுப்புவார் என்கிற கருத்தானது, கலாத்தியர் 5:22-23ன் படி, ஆவியானவர் செயல்படும் விதத்திற்கு நேர் எதிரானது ஆகும். கலாத்தியர் 5-ல் விவரிக்கப்பட்டுள்ள ஆவியானது நமக்குள் இச்சையடக்கத்தை ஊக்குவிக்கும் ஒன்றாகும், அதற்கு நேர் மாறாக அல்ல. இறுதியாக, வேதாகமத்தில் இயேசுவை விட பரிசுத்த ஆவியால் பூரணமாக நிரப்பப்பட்டவர்கள் யாரும் இல்லை, மேலும் அவர் சிரித்ததை வேதாகமம் ஒரு முறை கூட பதிவு செய்யவில்லை.

இந்த விஷயங்களின் வெளிச்சத்தில், 1 கொரிந்தியர் 14-ல் இருந்து பின்வரும் பத்தியைப் பார்ப்பது பயனுள்ளது, அங்கு பவுல் அந்நிய பாஷைகளைப் பற்றி பேசுகிறார். "மேலும், சகோதரரே, நான் உங்களிடத்தில் வந்து உங்களுக்கு இரகசியங்களை வெளிப்படுத்துவதற்காவது, அறிவுண்டாக்குவதற்காவது, தீர்க்கதரிசனத்தை அறிவிக்கிறதற்காவது, போதகத்தைப் போதிக்கிறதற்காவது ஏதுவானதைச் சொல்லாமல், அந்நியபாஷைகளில் பேசினால் என்னாலே உங்களுக்குப் பிரயோஜனம் என்ன?" (வசனம் 6)

"அந்தப்படி எக்காளமும் விளங்காத சத்தமிட்டால் எவன் யுத்தத்திற்கு ஆயத்தம்பண்ணுவான்? அதுபோல, நீங்களும் தெளிவான பேச்சை நாவினால் வசனியாவிட்டால் பேசப்பட்டது இன்னதென்று எப்படித்தெரியும்? ஆகாயத்தில் பேசுகிறவர்களாயிருப்பீர்களே" (வசனங்கள் 8-9).

"நீங்கள் கூடிவந்திருக்கிறபோது, ஒருவன் சங்கீதம் பாடுகிறான், ஒருவன் போதகம்பண்ணுகிறான், ஒருவன் அந்நியபாஷையைப் பேசுகிறான், ஒருவன் இரகசியத்தை வெளிப்படுத்துகிறான், ஒருவன் வியாக்கியானம் பண்ணுகிறான். சகோதரரே, இது என்ன? சகலமும் பக்திவிருத்திக்கேதுவாகச் செய்யப்படக்கடவது. யாராவது அந்நியபாஷையிலே பேசுகிறதுண்டானால், அது இரண்டுபேர்மட்டில், அல்லது மிஞ்சினால் மூன்றுபேர்மட்டில அடங்கவும், அவர்கள் ஒவ்வொருவராய்ப் பேசவும், ஒருவன் அர்த்தத்தைச் சொல்லவும் வேண்டும். அர்த்தஞ் சொல்லுகிறவனில்லாவிட்டால், சபையிலே பேசாமல், தனக்கும் தேவனுக்கும் தெரியப் பேசக்கடவன்" (வசனங்கள் 26-28)

"தேவன் கலகத்திற்கு தேவனாயிராமல், சமாதானத்திற்கு தேவனாயிருக்கிறார்; பரிசுத்தவான்களுடைய சபைகளெல்லாவற்றிலேயும் அப்படியே இருக்கிறது" (வசனம் 33).

அந்த நாட்களில், திருச்சபைகளில் பலர் மற்றவர்களால் அடையாளம் காண முடியாத மொழிகளில் பேசினார்கள், எனவே, பேச்சாளர் தனது பேச்சால் மற்றவர்களை ஆவிக்குரிய வாழ்வில் கட்டியெழுப்ப முடியாது என்பதால் அவர்கள் திருச்சபையில் பயனற்றவர்கள் என்று கூறுகிறார். பரிசுத்த சிரிப்புக்கும் இதைப் பயன்படுத்தலாம். வெளிப்படுத்துதல், போதனை, அறிவு, சத்தியம் ஆகியவற்றுடன் நாம் ஒருவருக்கொருவர் பேசாத வரையில் என்ன லாபம் (பவுல் கேட்கிறார்). மீண்டும், "சகலமும் நல்லொழுக்கமாயும் கிரமமாயும் செய்யப்படக்கடவது" என்று கூறுகிறார். "தேவன் கலகத்திற்கு தேவனாயிராமல், சமாதானத்திற்கு தேவனாயிருக்கிறார்" என்று கூறி அவர் தனது வாதத்தை முடிக்கிறார், இது திருச்சபைக்குள் உள்ள சூழ்நிலை குழப்பம் மற்றும் அர்த்தமற்றதாக இருக்க விரும்பவில்லை, ஆனால் அறிவு மற்றும் புத்துணர்ச்சியுடன் இருப்பதை அவர் தெளிவாக்குகிறார். .

பவுல் சொல்வதிலிருந்து, "பரிசுத்தமான சிரிப்பு" என்று அழைக்கப்படுவது கிறிஸ்துவின் சரீரத்திற்கு "கட்டுப்படுத்தாத" வகையின் கீழ் வரும், எனவே தவிர்க்கப்பட வேண்டும். a) சிரிப்பு ஒரு நம்பத்தகாத உணர்ச்சிபூர்வமான மாறுத்திரம் என்பதை நாம் உணர்ந்துள்ளோம்; b) இது பல்வேறு உணர்ச்சிகளின் அடையாளமாக இருக்கலாம்; மற்றும் c) அது பயனுள்ள எதையும் சாதிக்காது. மேலும், கட்டுப்படுத்த முடியாத உணர்ச்சிகளின் பிடிப்புகள் பரிசுத்த ஆவியின் இயல்புக்கு முரணானது. எனவே, "பரிசுத்தமான சிரிப்பை" தேவனிடம் நெருங்கி வருவதற்கான வழிமுறையாகவோ அல்லது அவருடைய ஆவியை அனுபவிப்பதற்கான வழிமுறையாகவோ பார்க்காமல் இருப்பது நல்லது.

English



முகப்பு பக்கம்

பரிசுத்தமான சிரிப்பு என்றால் என்ன?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries